செவ்வாய், 4 ஜனவரி, 2011

மனச்சோர்வால் வாடும் அரும்புகள்+வேலையை தேடி போகாதீர்கள்...உருவாக்குங்கள்!'

குழந்தைகளுக்கு ஏன் மனச்சோர்வு ஏற்படுகிறது? நம் குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படியெனில் அவர்களை மீட்பது எப்படி? இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.

மனச்சோர்வுக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். தாழ்வு மனப்பான்மை, அன்பற்ற சூழல், கண்டிப்பான பெற்றோர், நண்பர்கள் இல்லாமை, நண்பர்கள் அல்லது சக மாணவமாணவியருடன் ஏற்படும் பூசல்கள், சகோதர சகோதரிகள் மத்தியில் உண்டாகும் போட்டி, பொறாமை, பெற்றோர் செய்யும் ஒப்பீடுகள், ஆசிரியர்கள் காட்டும் பாரபட்சம், பாடச்சுமைகள் என எத்தனை எத்தனையோ.


கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
அளவுக்கதிகமான ஒட்டுதல்: சில குழந்தைகள் வளர்ந்தபின்னும் தாய் தந்தையை ஒட்டிக்கொள்ளுவார்கள். தனியாக எங்கும் செல்ல பயப்படுவார்கள். நெருங்கிய உறவினர்களின் மரணம், புதிய பள்ளிகளில் சேர்க்கப்படுதல், வீட்டில் இன்னொரு குழந்தையின் வரவு தனது சலுகைகளைப்பறித்துவிடுமோ என்ற அச்சம் இவையெல்லாம், சில குழந்தைகளிடம் மன அழுத்தத்தைத் தூண்டலாம். உங்களையே குழந்தை சுற்றிச் சுற்றி வருதல், பிரிவு குறித்த அச்சம் இவையெல்லாம் இருக்குமானால், அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

தனிமையை நாடுதல்: பிறருடன் சேர்ந்து விளையாடிக் களிக்க வேண்டிய குழந்தைகள், சலிப்புற்றுத் தனிமையில் அமருதல், எதிலும் ஆர்வமின்றி இருத்தல் ஆகியவை இருக்குமானால், பெற்றோர் அவர்களிடம் மனம் விட்டுப்பேசுவது அவசியம். அவர்கள் பேச மறுத்தால், குழந்தைகளுக்கான மனநல மருத்துவரை அணுகுவதும் நல்லதே!

கெட்ட பழக்கங்கள் உருவாதல்: பொய் சொல்லுதல், திருடுதல், பிறரை அடித்தல், எளிதில் கோபப்பட்டு கைக்குக் கிடைப்பதை வீசி எறிதல் போன்ற பழக்கங்கள் புதிதாக உருவாகின்றனவா? இதுவும் மன அழுத்தத்தின் விளைவாகவே இருக்கலாம்.




தன்னைத் தானே தாழ்த்திக்கொள்ளுதல்: தான் மக்கு, கெட்ட குழந்தை, அசடு, தனக்குப் படிப்பு வராது என்றெல்லாம் தன்னைப் பற்றியே ஒரு குழந்தை அடிக்கடி மட்டமாகச் சொல்லிக்கொள்கிறதா? பெரியவர்கள் எவ்வளக்கெவ்வளவு தாழ்வு மனப்பான்மை உண்டாகும்பொழுது அதை மறைக்க உயர்வாகப் பேசிக்கொள்வார்களோ அதற்கு எதிரானது குழந்தைகளின் செயல். இக்குழந்தைகள் ஏதோ காரணத்தால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்பட்டிருக்கலாம். அவர்களை அடிக்கடி புகழ்ந்துபேசி அவர்கள் மீது நம்பிக்கை இருப்பதைக் காட்டவேண்டியது பெற்றோர் கடமை.

படுக்கையை நனைத்தல்: வளர்ந்த குழந்தைகள், படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிட்டபின், திடீரெனத் திரும்பவும் அப்பழக்கத்திற்கு ஆட்பட்டால், அதற்கு மன அழுத்தமே காரணமாக இருக்க இயலும். இதுவும் கண்காணிக்கப்பட வேண்டியது.

கெட்ட கனவுகளால் பாதிக்கப்படுதல்: எப்போதாவது தூக்கத்தில் கெட்ட கனவுகள் கண்டு பயந்து அலறுதல் எல்லாருக்கும் உள்ளதுதான். ஆனால், அடிக்கடி பாதிப்பு உண்டாகுமானால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது நல்லது.


மதிப்பெண் குறைதல், பள்ளி செல்ல மறுத்தல்: நன்றாகப் படித்துக்கொண்டிருக்கும் குழந்தை திடீரெனப் பள்ளி செல்ல மறுத்தல், பள்ளித் தேர்வுகளில் மதிப்பெண் குறைதல், தேர்வுகளில் தோல்வியுறுதல் இவையும் குழந்தைகளின் மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள்தான். உடன் படித்த நண்பன் வேறு ஊருக்கு/பள்ளிக்கு மாற்றலாகிச் செல்லுதல், புதிய ஆசிரியரின் வருகை, ஆசிரியர் மீது ஏற்படும் வெறுப்பு இவை ஏதேனும் காரணமாக இருக்கலாம். குழந்தை பள்ளி செல்ல மறுத்தால், திட்டி, மிரட்டி இழுத்துச் சென்று பள்ளியில் விடாமல், அன்பாக விசாரித்தல் நல்லது. பள்ளியில் ஏதாவது புதிய மாற்றங்கள் உண்டாகியுள்ளனவா என அறிவதும். அடிக்கடி பள்ளிக்குச் சென்று குழந்தையின் வகுப்பாசிரியரிடம் குழந்தை நடந்துகொள்ளும் விதம், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள உறவு இவை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவை தவிர காரணமற்ற கோபம் மற்றும் அழுகை, எப்பொழுது பார்த்தாலும் பசி என்று சொல்லுவது அல்லது பசியே இல்லாமல் இருப்பது, அதிகக் களைப்பு, வலுவின்மை, தூக்கமின்மை அல்லது அதிகத் தூக்கம் முதலியவையும் மனச்சோர்வின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புண்டு.

மனச்சோர்வின் சில வகைகள்: அதிக மனச்சோர்வு அல்லது பெருமளவு மனச்சோர்வு (Major Depression), டிஸ்தைமியா (Dysthymia), இருதுருவக் குலைவு மனநிலை (Bipolar Disorder), காலமாற்றக் கோளாறுகள் (Seasonal Disorder) முதலியவை குழந்தைகளைப் பொதுவாகத் தாக்கும் மனநோய்கள்.

அதிக அல்லது பெருமளவு மனச்சோர்வு என்பது குழந்தைகள் எந்நேரமும் வருத்தமாக அல்லது குற்ற உணர்ச்சியாலோ தாழ்வு மனப்பான்மையாலோ பீடிக்கப்ப்ட்டு இருப்பது. 'நான் நன்றாகத்தானே இருக்கிறேன்' என்று இவர்கள் சொன்னால் கூட, இவர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தே இருப்பதை நாம் உணர முடியும். இந்த சோகமான மனோபாவம் இவர்கள் தூக்கம் மற்றும் உணவருந்துதலையும் பாதிக்கும். டிஸ்தைமியா பாதிப்பு உடைய குழந்தைகளிடம் குறைந்த அளவு மனச்சோர்வு இருப்பினும், இது வருடக்கணக்கில் நீடிக்கும். இது அன்றாட நடவடிக்கைகளைப் பாதிக்காதவரை, பெற்றோர் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். ஆனாலும், டிஸ்தைமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பத்து சதவீதத்திற்கும் மேற்பட்டோர், காலப்போக்கில் பெருமளவு மனச்சோர்விற்கு ஆளாகி விடுவதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். எனவே உங்கள் குழந்தைக்கு அடிக்கடி மனநிலை மாறுபாடு (Mood Swing) ஏற்படுமானால், அக்குழந்தை மீது கவனம் செலுத்துவது நல்லது.

இருதுருவக்குலைவு என்பது குழந்தை ஒருபுறம் வருத்தம், சோகம், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி இவற்றிற்கு ஆட்பட்டிருந்து, மறுபுறம் அதிகக் கோபம், தாறுமாறாக எரிச்சலுற்று வெடித்தல் போன்றவற்றைக் கொண்டிருப்பது ஆகும். இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் ஆவர். இக்கோளாறு முதிர்ச்சியடைகையில் எந்தச் செயலிலும் கவனமின்மை, எதிர்மறையாகவே செயல்படுதல், எப்பொழுதும் பதட்டம், எதிலும் ஒரு வித வெறித்தனமான (mania) விருப்பு அல்லது வெறுப்பினைக் காட்டுதல் ஆகியவையாக உருவெடுக்கிறது.

குழந்தைகள் மனச்சோர்வுக்கு ஆளாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஆளாகிவிட்டால் எந்த விதமான சிகிச்சையினை மேற்கொள்ளுதல் வேண்டும் என்பன குறித்து இப்பகுதியில் தொடர்ந்து காணலாம்.

வேலையை தேடி போகாதீர்கள்...உருவாக்குங்கள்!'

 வெல்டராகத் தன் வாழ்வைத் தொடங்கி, இன்று, தனியார் பால் விற்பனை நிலையம் வைத்து உயர்ந்துள்ள ராஜேந்திர பாபு: மதுரையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா வெல்டராக இருந்தார். நான் வீட்டிற்கு கடைசிப் பிள்ளை. காலையில் பள்ளிக்கு போய், மாலையில், என் அப்பா வேலை பார்க்கும் இடத்திற்கு போவேன்.அங்கு, என் அப்பா வேலை செய்யும் கஷ்டத்தைப் பார்க்கும் போது, ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதில், என் அப்பாவை உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற வெறி உண்டானது. பிளஸ் 2 முடித்ததும், பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் எடுத்துப் படித்தேன். படித்து முடித்த பின், பல நாட்கள் வேலைக்கு முயன்றேன்; எதுவும் அமையவில்லை.வேலைக்காக காத்திருப்பதை விட, அப்பா செய்த வெல்டிங் வேலையை செய்யலாம் என்று தோன்றியது. பின், என் பெற்றோரின் உதவியுடன், தனியாக ஒரு வெல்டிங் ஒர்க் ஷாப்பை
 உருவாக்கினேன். அப்போது, ஆவின் பால் டிப்போவிற்கு தேவையான பொருட்களை எல்லாம் வெல்டிங் செய்து கொடுக்கக்கூடிய ஒப்பந்தம் கிடைத்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலாக, ஆவின் டிப்போவிற்கு தேவையான பொருட்களைச் செய்து கொடுத்தேன்.என் தொழில் முறையைப் பார்த்து, டெய்ரி மில்க் போன்ற நிறுவனங்கள், அவர்களுக்குத் தேவையான பொருட்களைச் செய்து கொடுக்கச் சொல்லி ஒப்பந்தம் போட்டன. பல வருடங்கள், பல நிறுவனங்களுக்குப் பொருட்களைச் செய்து தரும்போது, அதில் ஒரு சில பொருட்கள் தேங்கிவிடும். அந்தப் பொருட்களைக் கொண்டு, பால் பண்ணை ஆரம்பிக்கும் படி என் அம்மா ஆலோசனை கூறினார்.எஸ்.என்.பி., டெய்ரி மில்க் என்ற நிறுவனத்தை உருவாக்கினேன். நான் ஆரம்பித்த இந்த நிறுவனம் தான், தென் மாவட்டத்திலேயே முதன் முதலாகத் தொடங்கப்பட்ட தனியார் பால் விற்பனை நிறுவனம். இன்று வரை வெற்றிகரமாக செயல்படுகிறது.






4 comments:

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள இடுகை

sakthistudycentre.blogspot.com சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
rajkumer சொன்னது…

நன்றி நண்பரே

rajkumer சொன்னது…

நன்றி

கருத்துரையிடுக